
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் முகமது ஷமி இந்திய அணிக்காக எப்போது மீண்டும் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக முகமது ஷமி தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி ஷமி தனது எக்ஸ் பக்கத்தில் வலைகளில் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வழக்கமான பந்துவீச்சு வேகத்தை விட கூடுதல் வேகத்தில் பந்துவீசுவது போன்ற காட்சிகளும் இடம்பிடித்திருந்தன.
இதன் மூலம் அவர் பிசிசிஐ தேர்வாளர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தான் இப்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், மீண்டும் களத்திற்கு வந்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளார். ஷமியின் இக்காணொளியை கண்ட ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கொண்டு ஷமி பந்துவீசி பயிற்சி பேறும் காணொளி இணையாத்தில் வைரலாகியும் வருகிறது.