
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 6) தொடங்கிய. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார்.
இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜேக்கப் பெத்தெல் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். அதேசமயம் இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விளையாடாத நிலையில், அறிமுக வீரர்கள் யஷஸ்வி ஜெய்வ்ஸால், ஹர்ஷித் ரானா ஆகியோர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றனர். அவர்களுடன் காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 5ஆவது ஓவருக்கு பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.