
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 76 ரன்களையும், தீபக் ஹூடா 50 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் 34, யஷஸ்வி 24, ரியான் பராக் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தாலும் அதன்பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் இணை அபாரமாக விளையாடியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 71 ரன்களையும், துருவ் ஜூரெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை எட்டியுள்ளது.