
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தற்போது கேப்டன் ஆக உயர்ந்திருக்கும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடிப்பதே கடினம் என்ற அளவிற்கு இருந்து வந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை உச்சத்தில் எடுத்துச் சென்றது. முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இவரால் முழுமையாக பந்துவீச முடியாது என்று கூறப்பட்டது. இதனால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல்-க்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை அணியில் இருந்து ரிலீஸ் செய்தது.
மிகவும் உடைந்து போன ஹர்திக் பாண்டியா, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல மெல்ல தனது இயல்பான பந்துவீச்சிற்கு திரும்பினார். இவர் மீது நம்பிக்கை வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு எடுத்தது. மேலும் கேப்டனாகவும் நியமித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அணிக்கு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார். பின்னர் இந்திய அணியிலும் மீண்டும் இடம் பிடித்தார். டி20 உலக கோப்பையில் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டார்.
இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறியதால், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது அதிருப்தி ஏற்பட்டது. அந்த தொடர் முடிவுற்ற உடனேயே சீனியர் வீரர்களை டி20 திட்டத்திலிருந்து நீக்கம் செய்தனர். இளம் வீரர்கள் கொண்ட பட்டாளத்திற்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவும் நியமித்தது. இவரும் கேப்டன் பொறுப்பில் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டார்.