
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு இல்லாததால் இருநாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படவில்லை. இந்தியாவிற்கு வந்து ஆடவும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆடவும் பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இந்திய அரசு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அதனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆனால் அதிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதில்லை.
இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பதால் ஆசிய கோப்பை பொதுவான இடத்திற்கு மாற்றப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து கூற, அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை அதிருப்தியையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இருதரப்பையும் அழைத்து ஆலோசித்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்பதில் உறுதியாக உள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று மிரட்டிப்பார்த்தது.