
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சேலை 14 கோடி என்ற தொகைக்கு நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் நியூசிலாந்துக்காக சதமடித்து வெற்றிக்கு போராடினார்.
குறிப்பாக ஷமி போன்ற தரமான பவுலர்களை கொண்ட இந்தியாவுக்கு எதிராக அரையிறுதியில் சதமடித்து அசத்திய காரணத்தால் அவரை சென்னை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக 4ஆவது இடத்தில் அதிரடியாக விளையாடுவதற்காக அவரை சென்னை வாங்கியுள்ளது.
இந்நிலையில் தம்முடைய மகளின் பிறந்த நாளில் நடைபெற்ற ஏலத்தில் சென்னை நிர்வாகம் தம்மை பெரிய தொகைக்கு வாங்கும் என்று எதிர்பார்க்கவில்லை என டேரில் மிட்சேல் தெரிவித்துள்ளார். அத்துடன் 14 கோடி என்பது தற்போதுள்ள கடினமான சூழ்நிலைகளிலிருந்து பல வகைகளிலும் தம்முடைய குடும்பத்தை காப்பாற்ற உதவும் என்று தெரிவிக்கும் அவர் தோனி தலைமையில் விளையாடி நிறையவற்றை கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.