
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன.
மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கள் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என்றும் அதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், அன்கேப்ட் வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் 3 வீரர்களுக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி வீதமும் கடைசி இரு வீரர்களுக்கு ரூ.18 கோடி, 14 கோடி வீதமும் ஊதியமாக வழங்க வேண்டும் என்ற நடைமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு அணி 5 வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்குரிய மொத்த தொகையானது ரூ.75 கோடி போக மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து தான் ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்க முடியும் என்ற நிலையை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. இதனால் அணிகள் இந்த ஏலத்தில் எவ்வாறு செயல்படும் என்று பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.