
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு முனீபா அலி - குல் ஃபெரோசா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குல் ஃபெரோசா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சித்ரா அமீன் 8 ரன்களிளுக்கும், ஒமைமா சொஹைல் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முனீபா அலியும் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 41 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய நிதா தார் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய அலியா ரியாஸ் 4 ரன்களுக்கும், கேப்டன் ஃபத்திமா சனா 13 ரன்களுக்கும், துபா ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதா தாரும் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் சயீத் அரூப் ஷா 14 ரன்களையும், நஷ்ரா சந்து 6 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களைச் சேர்த்தது.