
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில், அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றால்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2-2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இதனால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை எப்போவே இழந்துவிட்டது.
நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல் வாய்ப்பை இழந்துவிட்டது. இதனால், இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும், வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட், அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட்களிலும் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி இந்தியா வென்றால் 68.06 சதவீக புள்ளிகள் கிடைக்கும். இறுதிப் போட்டிக்கு சுலபமாக தகுதி பெறலாம். ஒரு போட்டியின் தோற்றாலும், வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா (75%) முதலிடத்தில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா (60%), இலங்கை (53.33%) அணிகளும் 2,3 ஆகிய இடங்களில் இருக்கின்றன. இந்தியா 52.08% புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நான்கு அணிகளுக்கு மட்டுமே பைனலுக்கான வாய்ப்பு இருக்கிறது. இதில், ஆஸ்திரேலிய அணி கிட்டதட்ட பைனல் வாய்ப்பை உறுதிசெய்துவிட்டது. மற்றொரு இடத்திற்குத்தான் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது.