
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்றுடன் முடிகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான மெக் லானிங் ஒருமுனையில் நிலைத்து நின்று பேட்டிங் ஆட, மறுமுனையில் ஷஃபாலி வெர்மா(11), அலைஸ் கேப்ஸி(0), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(9) ஆகியோர் இசி வாங்கின் பவுலிங்கில் மளமளவென ஆட்டமிழந்தனர். மேரிஸன் கேப் 21 பந்தில் 18 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று விளையாடிய மெக் லெனிங் 35 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.
ஜெஸ் ஜோனாசென்(2), மின்னு மனி(1), டானியா பாட்டியா(0) ஆகிய மூவரும் ஹைலி மேத்யூஸின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். 79 ரன்களுக்கே டெல்லி கேபிடள்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஷிகா பாண்டே யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சருமாக விளாசி அசத்தினார். அவருடன் இணைந்த ராதா யாதவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 52 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.