
டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்றும் பொருட்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நான்கு வருடங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் வெற்றி பெறும் சதவீதத்தின் அடிப்படையில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்றன.
முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் தகுதிப்பெற்றன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வென்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது. இதற்கடுத்து இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கான தகுதியை இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் பெற்றுள்ளன.
இரு அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக விளையாடிய இந்தியா - ஆஸ்திரேலியா வீரர்கள் ஒருங்கிணைந்த சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ரிக்கி பாண்டிங். தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள பாண்டிங், 3ஆம் வரிசையில் லபுஷேன், 4ஆம் வரிசையில் கோலி, 5ஆம் வரிசையில் ஸ்மித் என சமகாலத்தின் தலைசிறந்த 3 டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்துள்ளார்.