
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியின் போது 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெகு விரைவாக வெற்றி கோட்டினை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் என அடுத்தடுத்து மூன்று வீரர்கள் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
இதன்காரணமாக இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் அற்புதமாக இன்னிங்சை கட்டமைத்தார். அவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்க்கு 165 ரன்கள் சேர்க்கவே இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக சென்றது.