Advertisement

இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ சவுரவ் கங்குலி#HappyBirthdayDada

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி தனது 49ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினரோடு கொண்டாடிவருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 08, 2021 • 11:36 AM
BCCI President and former team captain Sourav Ganguly turns 49
BCCI President and former team captain Sourav Ganguly turns 49 (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 1999ஆம் ஆண்டு இருண்ட காலம். அஸாரூதீன், அஜய் ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியை எங்கு சென்றாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இந்திய அணி மீதான சூதாட்ட புகாரால் அப்போதைய பயிற்சியாளர் கபில் தேவ், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதாளத்தை நோக்கி செல்கிறது என்ற விமர்சனங்கள் பட்டித்தொட்டி எல்லாம் எழத்தொடங்கியது.

இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு 'கல்கத்தாவின் இளவரசன்' என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியிடம் வந்தது. இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த வேண்டும், இந்திய கிரிக்கெட்டின் ஆட்ட முறையை மாற்ற வேண்டும், எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை யாரும் அசைக்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும் என நினைத்து கேப்டன் பதவிக்கு வந்த கங்குலிக்கு சூதாட்ட புகார்கள் மிகப்பெரிய ஏமாற்றம்.

Trending


சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு போட்டியாக ஆக்ரோஷத்திலும், பேட்டிங்கிலும் அசத்திய கங்குலிக்கு, இந்திய கிரிக்கெட்டை மீட்க கேப்டன்சி என்னும் ஆயுதத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கையில் கொடுத்தது. இருப்பினும் அந்த சமயத்தில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்தது. சச்சின், டிராவிட், லக்ஷ்மண், கும்ப்ளே, ஸ்ரீநாத் என சிறந்த வீரர்கள் இருந்தாலும் சொந்த நாட்டிலேயே தோல்வியை தான் சந்தித்துகொண்டிருந்தது. 

இதனால் யாரும் எதிர்பாரத வகையில் கங்குலி ஒரு முடிவாக இந்திய அணிக்குள் இளம் வீரர்களை கொண்டுவர முடிவு செய்தார். அவருக்கு உதவியாக ஜான் ரைட், டால்மியா, துணை கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் என அனைவரும் உடனிருந்தனர்.

மக்களிடம் இந்திய அணி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்ததால், ஆஸ்திரேலியாவை விளையாட அழைக்க நேரிட்டது. இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் கும்ப்ளே, ஸ்ரீநாத் இருவருக்கும் காயம் காரணமாக விலகினர். இதனை முன்கூட்டியே கணித்த கங்குலி ஹர்பஜன் சிங் பற்றி கேள்வி பட்டு, கும்ப்ளேவிடம் பயிற்சி பெற வைத்ததால் அணியில் ஹர்பஜன் இடம்பெற வேண்டும் என விரும்பினார். 

ஆனால் தேர்வாளர்கள் கங்குலியின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். அப்போது கங்குலி, ஹர்பஜன் பெயர் இந்திய அணியில் இடம்பெற்றால் தான் இந்த இடத்தைவிட்டு வெளியேறுவேன் என தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் கங்குலி கேப்டன்சி மீதான கேள்விகள் எழத் தொடங்கியது.

அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி. முன்னாள் வீரர்களின் விமர்சங்கள் அதிகமாகின. இதையடுத்து இரண்டாவது போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, 'கொல்கத்தா எனது கோட்டை, என் ஊரில் எங்களை வெல்ல முடியாது' என கர்ஜித்தார். அவர் கூறியதைப் போலவே, லக்‌ஷ்மண், டிராவிட் ஆடிய ஆட்டம் இந்திய அணியை காப்பாற்றியது என்று சொன்னால், ஹர்பஜன் சிங் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகள் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. 

அந்த தொடரில் ஹர்பஜன் சிங் 32 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் கங்குலியின் தேடல் அதிகமானது. அதனையடுத்து யுவராஜ் சிங் என்னும் இளம் காளையை அணிக்குள் கவனமாக காப்பாற்றி வந்தார். இந்திய அணியில் பெரிதாக ஃபீல்டர்கள் இல்லை, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை என பேசியவர்கள் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தைப் பார்த்து பிரமித்து போனார்கள்.

ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா மனப்பான்மையுடன் ஆடும் யுவராஜ் சிங்கை கண்டு கிரிக்கெட் உலகம் அதிர்ந்தது. பின்னர் முகமது கைஃப், சேவாக் என இந்திய அணியின் அடுத்தடுத்து படைப்புகளாக கங்குலியின் கேப்டன்சியில் பிரவேசித்தனர். உலகின் தலைசிறந்த கேப்டனாக அரியப்படும் ஸ்டீவ் வாஹ், பாண்டிங்கிகும் கூட கங்குலியின் கேப்டன்சியை கண்டு பிரமித்துபோனார்கள்.

கங்குலி அணியில் கொண்டு வந்த அடுத்த சரவேடி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஆரம்ப போட்டிகளில் சில சறுக்கல்களை சந்தித்த தோனிக்கு, உறுதுணையாக நின்று தொடர்ந்து நம்பிக்கை வைத்தவர். 

அதற்கு கிடைத்த பரிசு, தோனியின் ஆட்டத்தைப் பார்த்து பாகிஸ்தானின் முஷரஃப், 'எங்கிருந்து பிடித்து வந்தீர்கள் தோனியை' என கங்குலியிடம் கேட்டபோது, 'வாகா பார்டரில் சுற்றிக்கொண்டிருந்தார், பிடித்து வந்துவிட்டோம்' என பதில் கூறினார். அது தான் கங்குலி என்னும் கேப்டன் செய்தது. கங்குலியின் தேடல் மிகப்பெரியது. எங்கிருந்தாலும் நன்றாக ஆடினால் அணியில் சேர்த்து மாபெரும் வீரராக்குவார். அவ்வாறு தான் இந்திய அணிக்குள் தோனி வந்ததும்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் அணி என்றால் அது 2003இல் ஆடிய இந்திய அணி தான். இன்றும் நிறைய நண்பர்கள் வீடுகளில் அந்த புகைப்படங்கள் ஒட்டியிருக்கும். அதேபோல் ஆஸ்திரேலியர்களும், இங்கிலாந்தினரும் மற்ற அணிகளை ஸ்லெட்ஜிங் செய்கையில், அதற்கு பதிலாக இந்திய அணி அமைதியாக பேட்டிங்கில் மட்டுமே காட்டிய ஆக்ரோஷத்தை களத்திற்கு கொண்டு உடனடியாக திருப்பி கொடுப்பதில் கங்குலிக்கு நிகர் கங்குலியே. இன்று கோலி வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் எல்லாம் கங்குலி முன்னால் வெறும் 50 விழுக்காடு மட்டுமே.

முதல் ஸ்பெல்லை வீசும் பந்துவீச்சாளர்கள் சொதப்பினால் யாரும் எதிர்பாராதவாறு திடீரென ஸ்பின்னரை கொண்டு வருவது எல்லாம் கங்குலி தொடங்கி வைத்த யுக்திகளில் ஒன்று. இதையடுத்து 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், டிராவிட்டை இந்திய அணியின் கேப்டனாக நியமித்தனர். அதேசமயம் மீண்டும் சகவீரராக கங்குலி களமிறங்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது. அப்போது கங்குலியின் பேட்டிங் சரிவர அமையாததால், அவரை அணையிலிருந்தும் நீக்கினர்.

‘காயப்பட்ட சிங்கத்தோட் மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்’ என்ற வசனத்திற்கேற்ப உள்ளூர் போட்டியில் அடித்து துவைத்து வந்து நின்றார் யாரும் தவிர்க்க முடியாத தாதாவாக. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திரும்பி வந்த தொடரின் முதல் போட்டியிலேயே 98 ரன்கள். கங்குலியை அணியிலிருந்து நீக்க காரணமான கிரேக் சேப்பல் அதிர்ந்துபோனார். அதனையடுத்து 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராஃபி தொடரோடு கங்குலி ஓய்வை அறிவித்தார்.

சர்வதேச அளவில் இந்திய அணி மீதான பெயரை மாற்றினார். அதே அணியை மரியாதையாக பார்க்க வைத்தார். அதே அணியை வெற்றிபெறும் அணியாகவும் மாற்றினார். அதுதான் இந்திய அணியில் வேறு எந்த வீரராலும் செய்ய முடியாத மாற்றங்கள். இப்போது இந்திய அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்திலும் கங்குலிதான் இருக்கிறார். கேப்டனாக இருந்தாலும், வீரராக இருந்தாலும், முன்னாள் வீரராக இருந்தாலும் கங்குலி செலுத்தும் ஆதிக்கத்தை வேறு எந்த வீரராலும் செய்ய முடியாது.

ஏனென்றால் துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு மீண்டும் புத்தூயிர் கொடுத்து முதுகெலும்பை உருவாக்கியவர் கங்குலிதான். தற்போதும் வலுவான இந்திய அணியை கட்டமைக்க பிசிசிஐயின் தலைவராக வலம்வந்துகொண்டிருக்கிறார். தற்போது கொல்கத்தா மட்டுமல்ல, இந்தியாவே தாதாவின் கோட்டையாக மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல..!#HappyBirthdayDada


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement