சர்வதேச கிரிக்கெட்டில் இருதரப்பு தொடர்களை விட ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது. அதனாலேயே 2 வருடத்திற்கு ஒருமுறை அல்லது 4 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைகளை வெல்வதை அனைத்து முன்னணி நாடுகளும் தங்களது முதன்மையான இலக்காக வைத்து எஞ்சிய நாட்களில் விளையாடுகின்றன. 

Advertisement

உலக கோப்பையை வெல்வதைப் போலவே அதை நடத்துவதும் ஒரு நாட்டைப் பொறுத்தவரை மிகப் பெரிய கௌரவமாகும். ஏனெனில் அதை நடத்தும் போது ஒட்டுமொத்த உலகின் கவனம் தங்களது நாட்டின் மீது இருக்கும் என்பதுடன் வரலாற்றிலும் அந்த உலக கோப்பையால் அதை நடத்தும் நாடு இடம் பிடிக்கும். மேலும் அதனால் தங்களது வாரியத்திற்கு பணமும் நாட்டின் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். அதைவிட உலகக்கோப்பை தங்களது நாட்டில் நடைபெறும் போது தங்களது அணிக்கு சொந்தமண் சாதகத்தால் கோப்பை வெல்வதற்கும் அதிக வாய்ப்பு கிடைக்கும். 

Advertisement

அதனாலேயே ஒவ்வொரு முறை உலகக்கோப்பையை ஐசிசி நடத்தும் போது அதை தங்களது நாட்டில் நடத்துவதற்கான உரிமையை வாங்க அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கடுமையாக போட்டிபோடும். அந்த வகையில் வரும் 2024 – 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பைகளை நடத்தும் உரிமங்களை நிர்ணயிக்கும் ஐசிசி உயர்குழு கூட்டம் நேற்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.

அதில் வழக்கம் போல இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் உரிமைகளை வாங்க போட்டி போட்டன. இருப்பினும் வழக்கம் போல சுழற்சி முறையில் உரிமைகளை வழங்கும் ஐசிசி வரும் 2024இல் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பையை வங்கதேசத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் அந்த தொடரில் 23 போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கு கடைசியாக கடந்த 2014இல் ஆடவர் டி20 உலக கோப்பை நடைபெற்ற நிலையில் அதில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது.

அதை தொடர்ந்து கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 50 ஓவர் உலக கோப்பை வரும் 2025ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான உரிமையை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் கடும் போட்டிபோட்டு இறுதியாக பிசிசிஐ வெற்றிகரமாக வாங்கியது. 2017இல் இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த உலக கோப்பை சமீபத்திய 2022 பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெற்றது. எனவே அடுத்த முறை ஆசிய கண்டத்தில் நடத்த விரும்பும் ஐசிசி அதில் பெரிய நாடாக திகழும் இந்தியாவிற்கு முன்னுரிமை அளித்து இந்த முடிவை எடுத்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கோப்பையில் 31 போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்குமுன் கடந்த 1978, 1997 ஆகிய ஆண்டுகளில் இந்திய மண்ணில் நடைபெற்ற இந்த உலக கோப்பை கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

Advertisement

வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை இந்திய மகளிரணி வென்றதில்லை என்ற நிலைமையில் 2025இல் சொந்தமண் சாதகத்துடன் இம்முறையாவது கோப்பையை வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னதாக வரும் 2023 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐசிசி ஆடவர் 50 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது.

அதற்கடுத்த ஒரு வருடத்தில் மீண்டும் ஒரு உலக கோப்பையை இந்தியா நடத்தவுள்ளது பெருமையான அம்சமாகும். இதைத் தொடர்ந்து வரும் 2026இல் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. அதில் மொத்தம் 12 அணிகள் 33 போட்டிகளில் பங்கேற்கின்றன. அதேபோல் வரும் 2027இல் டாப் 6 அணிகள் பங்கேற்கும் 16 போட்டிகள் கொண்ட மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கை கிரிக்கெட் வாரியம் கைப்பற்றியுள்ளது.

மேலும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் ஆடவர் டி20 உலகக்கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஆடவர் ஒருநாளுலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கைப்பற்றியுள்ளது.

Advertisement

மேலும் 2023 – 2027 வரையிலான காலகட்டத்தின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் வெளியிட உள்ளதாகவும் ஐசிசி அந்தக் கூட்டத்தின் முடிவில் அறிவித்துள்ளது. அதில் இந்தியா 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தெரிகிறது. அத்துடன் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டியின் உறுப்பினராக இந்திய ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் நியூசிலாந்து ஜாம்பவான் டேனியல் வெட்டோரி ஆகியோரை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐசிசி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 2022 நவம்பரில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக கம்போடியா, இவோரி கோஷ்ட், உஸ்பெகிஸ்தான் ஆகிய புதிய நாடுகளை உறுப்பினர்களாகவும் ஐசிசி சேர்த்துக் கொண்டுள்ளது. அதையும் சேர்த்து தற்போது உலகளவில் 108 நாடுகளில் கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News