Manchester Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் ஆரைசதம் கடந்து அணியை முன்னிலை நோக்கி அழைத்து சென்றுள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி இணை அபாரமான தொடக்கத்தை வழங்கினர். இவரும் தங்களின் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாக் கிரௌலி 84 ரன்களுக்கும், பென் டக்கெட் 94 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஒல்லி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன் 135 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 332 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஒல்லி போப் 70 ரன்களுடனும், ஜோ ரூட் 63 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 26 ரன்கள் மட்டுமே பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.