4th Test, Day 3: ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் அசத்தல்; வலுவான முன்னிலையில் இங்கிலாந்து!
Manchester Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 186 ரன்கள் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி இணை அபாரமான தொடக்கத்தை வழங்கினர். இதில் ஜாக் கிரௌலி 84 ரன்களுக்கும், பென் டக்கெட் 94 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்களை எடுத்திருந்தது.இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஒல்லி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன் 144 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 71 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஒல்லி போப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக்கும் 3 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் ஜோ ரூட் தனது 38ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுபக்கம் பென் ஸ்டோக்ஸும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 14 பவுண்டரிகளுடன் 150 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் 9 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 544 ரன்களைக் குவித்துள்ளது. இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 76 ரன்களுடனும், லிடாம் டௌசன் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 186 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.