4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து!

Updated: Mon, Feb 26 2024 11:45 IST
4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து! (Image Source: Google)

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்த, முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது.  இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் அரைசதம் அடித்ததை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 307 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அஸ்வின் மற்றும் குல்தீப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி 60 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதன்மூலம் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்துது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் 55 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்துள்ள ஷுப்மன் கில் - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி வருகின்றனர். இதன்மூலம் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷுப்மன் கில் 18 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 74 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை