இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணிக்கு கேப்டன் ஈஷா ரோஹித் - தீர்த்தா சதீஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் ஈஷா ரோஹித் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரினிதா ரஜித் 6 ரன்களிலும், கவிஷா 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தீர்த்தா சதீஷ் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தர்
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சதியா இக்பால், நஷ்ரா சந்து மற்றும் துபா ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு குல் ஃபெரோஸா மற்றும் முனீபா அலி ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை எட்டியது. இதில் அபாரமாக விளையாடிய குல் ஃபெரோஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குல் ஃபெரோஸா 8 பவுண்டரிகளிடன் 62 ரன்களையும், முனீபா அலி 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணியானது 14.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது.