ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 600 ரன்களுக்கு மேல் குவிப்பார் - ஆகாஷ் சோப்ரா!
சமீப காலமாக இந்திய அணியில் அதிகம் பேசப்படும் பெயராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உயர்ந்துள்ளார். கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 8 டெஸ்ட் மற்றும் 17 டி20 போட்டிகளில் மட்டுமே விலையாடி இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தையும், டி20 கிரிக்கெட்டில் சதத்தையும் பதிவுசெய்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார்.
மேலும், நடைபெற்றும் வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதங்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை இத்தொடரில் 4 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 655 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனும் இம்மாதம் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்வுள்ளது. இதில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடவுள்ளார். இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 600 ரன்களுக்கு மேல் குவிப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளதாக நான நினைக்கிறேன். ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி நிச்சயம் எதிரணிக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பார்கள் என தோன்றுகிறது. மேலும் ஐபிஎல் தொடரிலும் நம்பர் ஒன் தொடக்க ஜோடியாகவும் இது அமையலாம். ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தற்போதைய ஃபார்ம் காரணமாக இதனைச் சொல்கிறேன். மேலும் இந்த தொடரில் அவர் 600 ரன்களுக்கு மேல் நிச்சயம் குவிப்பார் என்று தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.