பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் பாபர், ரிஸ்வான், ஷாஹீன்?

Updated: Wed, Jun 11 2025 12:31 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களாகவும், அந்த அணியின் முன்னாள் கேப்டன்களாகவும் செயல்பட்டுள்ள பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரை டி20 அணியில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே சீரற்ற தன்மை நிலவி வருகிறது. அணியின் பயிற்சியாளரை மற்றுதல், அணியின் கேப்டன்களை மாற்றுதல், அணியின் தேர்வுகுழுவினரை மற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது.

இதையடுத்து எதிர்வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி பல்வேறு முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணைக்கேப்டனாக ஷதாப் கனும் நியமிக்கப்பட்ட நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். 

முன்னதாக இந்த மூன்று வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்சமயம் பாகிஸ்தான் அணியின் அடுத்தடுத்த டி20 தொடர்களில் இருந்தும் இவர்களை புறக்கணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர், ஷாஹீன் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலி படி, பாகிஸ்தானின் நிர்வாகமும் தேர்வுக் குழுவும் பாபர் மற்றும் ரிஸ்வானிடமிருந்து விலக விரும்புகின்றன. அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசைன் மற்றும் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோர் ரிஸ்வான், பாபர் ஆசாம் ஆகியோர் மீண்டும் டி20 அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற கூறிய நிலையிலும், அவர்களின் ஸ்டிரைக் ரேட் பெரும் பிரச்சனையாக இருப்பதால் தேர்வு குழு அவர்களை நீக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அச்சமயம் பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் பாகிஸ்தான் டி20 அணியில் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அதன்பின் அந்த அணி சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி மற்றும் நியூசிலாந்து தொடரில் தோல்வியை சந்தித்ததை அடுத்து இவர்கள் மூவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

பாகிஸ்தான் அணி ஜூலை 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலும், அதன்பின் ஃபுளோரிடாவில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அந்த அணியின் கேப்ட்னாக சல்மான் அலி ஆகா தொடர்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை