கோலி, ரோஹித்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - ஜோ ரூட்! 

Updated: Thu, Sep 14 2023 15:45 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தோடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதில் 2011 போல சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் இந்தியாவில் வெல்வதற்கு பேட்டிங் துறையின் இரு துருவங்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள்.

அந்த வரிசையில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் விளாசிய விராட் கோலி அதிவேகமாக 13,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் உலக சாதனையை படைத்து வெற்றியில் பங்காற்றி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்து வருகிறார். அதே போல சமீப காலங்களில் தடுமாறிய ரோஹித் சர்மாவும் நிறைய விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

இருப்பினும் இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற உலக சாதனையை படைத்த இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி வருகிறார். ஆனாலும் அழுத்தமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் கைவிடுவதால் காலம் கடந்த இந்த சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் கிறிஸ் கெயில், ஜேம்ஸ் ஆண்டர்சன் போல அதிக வயதில் அனுபவத்தால் அசத்தும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை குறைத்து மதிப்பிடுவது எதிரணிகளுக்கு ஆபத்தானது என ஜோ ரூட் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜோ ரூட், “அதிக வயது காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களை முடிந்து விட்டார்கள் என்று எழுதுவது மிகவும் ஆபத்தானது என கருதுகிறேன்.

எடுத்துக்காட்டாக டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் எவ்வளவு நீண்ட காலம் விளையாடினார் என்பதை பாருங்கள். உலகில் நிறைய சிறந்த வீரர்கள் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி செயல்பாடுகளில் அசத்தியுள்ளனர். எனவே நீங்கள் நன்றாக ஃபிட்டாக இருக்கும் வரை தொடர்ந்து விளையாடலாம். இதற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றொரு எடுத்துக்காட்டாவார்.

குறிப்பாக 40 வயதிலும் சிறப்பாக செயல்படும் அவரை அதிக வயதாகி விட்டார் என்பதற்காக நாங்கள் நீக்க முடியாது. ஏனெனில் இப்போதும் அவர் தான் எங்களுடைய பவுலிங் அட்டாக்கின் தலைவராக இருக்கிறார். நாங்கள் அவருடைய நுணுக்கம் மற்றும் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வதை சாதகமாக பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை