இங்கிலாந்தின் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேல்ஷ் ஃபையர் அணியானது இன்னிங்ஸின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனசன் 54 ரன்களையும், ஹீலி மேத்யூஸ் 22 ரன்களையும், டாமி பியூமண்ட் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்த மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். லண்டன் அணி தரப்பில் எவா கிரே மற்றும் சாரா கிளென் ஆகியோர் அதலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் ஸ்பிரிட் அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது.
பின்னர் இணைந்த ஜார்ஜியா ரெட்மெய்ன் - கேப்டன் ஹீதர் நைட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின் ஹீதர் நைட் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேனியல் கிப்சன் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா ரெட்மெய்னும் 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 5 பந்துகளில் லண்டன் ஸ்பிரிட் அணி வெற்றிபெற 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதேசமயம் களத்தில் இருந்த தீப்தி சர்மா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லண்டன் ஸ்பிரிட் அணியானது 98 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வேல்ஷ் ஃபையர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் லண்டன் ஸ்பிரிட் அணியானது தி ஹண்ட்ரட் மகளிர் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜியா ரெட்மெய்ன் ஆட்டநாயகி விருதினை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் பரபரப்பான சூழ்நிலையிலும் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த தீப்தி சர்மாவின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.