கடந்த ஆண்டு கரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்ஹாம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் பர்மிங்காமில் நிலவிய மேகமூட்டமான நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸில் பந்துவீச்சில் இந்தியாவின் டாப் ஆர்டரே ஆட்டம் கண்டது.

Advertisement

சுப்மான் கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும், விஹாரி 20 ரன்களிலும் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களில் மேட்டியில் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் அய்யரும் 15 ரன்களுக்குள் பெவிலியன் திரும்ப 98 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தள்ளாடத் துவங்கியது.

Advertisement

சரிவில் இருந்து அணியை மீட்கும் பணியில் இறங்கியது ஜடேஜா- ரிஷப் பந்த் இணை. ஜடேஜா நிதான ஆட்டத்தை கையிலெடுக்க, ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தின் பக்கம் திரும்ப ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. 51 பந்துகளில் அரை சதம் விளாசிய பண்ட், 89 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் ஐந்தாவது சதம் இதுவாகும். அவர் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்துள்ளார். 

சதம் கடந்ததும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார் ரிஷப். லீச்சின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இதனால், 63.1 ஓவரில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய பந்த் 111 பந்துகளில் 146 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஜோ ரூட் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதில் 19 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஜோடி  200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரை சதம் கடந்தார். அடுத்துவந்த ஷர்துல் தாகூர் 1 ரன்னில் வெளியேறினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்த்தது. 

அதன்பின் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா 83 ரன்னிலும், முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் (0) இன்னிங்ஸைத் தொடங்கினர். இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதன்பின் 16 ரன்களில் ஷதுல் தாக்கூர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 104 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜாவும் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84ஆவது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி பிரம்மிப்படையச் செய்தார்.

அந்த ஓவரில் இரண்டு சிக்சர், 4 பவுண்டரிகளை பும்ரா விளாசி அசத்தினார். இதனால் அந்த ஓவரில் 35 ரன்கள் கிடைத்தது. மேலும் இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் சென்ற ஓவராகவும் அமைந்தது.

அதன்பின் இரண்டு ரன்கள் எடுத்திருந்த முகமது சிராஜ், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

Advertisement

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய அணி கேப்டன் ஜஸ்ப்ரித் 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 31 ரன்களைச் சேர்த்திருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News