WTC Points Table: லார்ட்ஸில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலிலும் 66.67 வெற்றி சதவீதத்துடன் 24 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி இருந்தது.
இந்நிலையில் தாற்போது இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வீரர் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக வீரர்களுக்கு 10 சதவீத அபாரதமும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது அபராதமாக விதித்துள்ளது.
இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளை இழந்ததுடன் 61.11 என்ற வெற்றி சதவீதத்துடன், 22 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை அணி 66.67 என்ற வெற்றி சதவீதத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 100 என்ற வெற்றி சதவீதத்துடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
ஏற்கனெவ கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இங்கிலாந்து அணி ஸ்லோ ஓவர் ரேட்டின் காரணமாகவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது. இதில் கடந்த 2021-23ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக 10 புள்ளிகளையும், 2023-25ஆஅம் ஆண்டிற்கான சுழற்ச்சியில் 22 புள்ளிகளையும் இழந்து தங்களின் வாய்ப்பை இழந்திருந்தது.
Also Read: LIVE Cricket Score
இந்நிலையில் தற்சமயம் இங்கிலாந்து அணி மீண்டும் தொடரின் ஆரம்பத்திலேயே ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக புள்ளிகளை இழந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் தற்சமயம் அந்த அணி எதிர்வரும் போட்டிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமானதாக பார்க்கப்படுகிறது.