இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீர்ர் வினோத் காம்ப்ளி. மேலும் இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர். இந்திய அணிக்காக 1991ஆம் ஆண்டு அறிமுமகான வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார்.
அதன்பின், அணியின் கேப்டனுடன் மோதல், காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள், மோசமான ஃபார்ம் என தன்னுடைய கெரியரை முழுவதுமாக இழந்தார் வினோத் காம்ப்ளி. பிறகு, மோசமான நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி சிக்கியதாகவும், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உதவியதாகவும் சாமீபத்தி சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கொண்டு அக்காணொளியை பதிவிட்ட நபர் தனது பதிவில் , “இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி சமீப காலமாக உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதயப் பிரச்சினைகள் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலக் கவலைகள் காரணமாக அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து அவருக்குத் தேவையான ஆதரவைப் பெறுவார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியில் வினோத் காம்ப்ளியால் நிற்கக் கூட முடியால், நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு, மற்றவர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக அவர் அழைத்து செல்லப்பட்டது ரசிகர்களிடையேயும் பெரும் வேதனை தரும் விதமாக அமைந்திருந்தது. இதனைக்கண்ட பலரும் வினோத் காம்ப்ளியின் போதைப் பழக்கத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும், சிலர் அவர் நீண்ட காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மேற்கொண்டு இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் சிலர் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.