ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது முறையாக வரும் அக்டோபர் 16 முதல் நடைபெறுகிறது. இந்த தொடரில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கும் இந்தியா 2007 க்கு பின் 2ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

Advertisement

இருப்பினும் சமீபத்தில் சந்தித்த ஆசிய கோப்பை தோல்விக்கு காரணமாக அமைந்த சுமாரான பந்து வீச்சில் இன்னும் முன்னேறாத இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ளது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஏனெனில் அவரை தவிர்த்து புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் மித வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். எனவே சற்று பலவீனமான பந்துவீச்சு துறையுடன் களமிறங்கும் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறை அபாரமாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் டாப் ஆர்டரில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பினாலும் ரோகித், ராகுல் ஆகியோர் தடுமாற்றமான பார்மில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கிறது. 

இருப்பினும் லோயர் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதும் 4ஆவது இடத்தில் நான் இருக்கிறேன் என்ற வகையில் சூரியகுமார் இருப்பதும் ரசிகர்களுக்கு தெம்பை கொடுக்கிறது. அதிலும் தற்சமயத்தில் இந்திய பேட்டிங் வரிசையில் சூரியகுமார் யாதவ் மட்டுமே அட்டகாசமான பார்மில் இருக்கிறார் என்றே கூறலாம். 

கடுமையான போராட்டத்திற்குப் பின் 30 வயதில் தாமதமாக அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 6 ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள அவர் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் களமிறங்கியதிலிருந்தே சரவெடியாக பேட்டிங் செய்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அதனாலேயே மடமடவென 32 கிரிக்கெட் போட்டிகளிலேயே உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவரை மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடிப்பதால் இந்தியாவின் ஏபிடி என்று இந்திய ரசிகர்கள் அழைக்கின்றனர். இருப்பினும் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் அவர் அங்குள்ள வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை சமாளித்து இந்தியாவை வெற்றி பெற வைப்பாரா என்பதே இந்த உலக கோப்பையில் அவருக்கு காத்திருக்கும் சவாலாகும். 

Advertisement

இந்நிலையில் முதல் முறையாக இருந்தாலும் சூர்யகுமார் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் அசத்துவார் எனக்கூறும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் அவரை இந்தியாவின் ஏபிடி டிவிலியர்ஸ் என்று மனதார பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“ஒரு அற்புதமான 360 டிகிரி வீரரான அவர் ஏபி டிவிலியர்ஸை எனக்கு நினைவு படுத்துகிறார். தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் இந்தியாவின் ஏபிடி’யாக செயல்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த உலக கோப்பையில் அசத்தப் போகும் வீரர்களில் நிச்சயம் அவரும் ஒருவராக இருப்பார். 

ஏனெனில் பந்தின் வேகத்தை பயன்படுத்தி அடிக்கும் பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர். குறிப்பாக ஸ்கொயர் திசைக்கு கீழே அடிப்பதற்கு அவர் மிகவும் விரும்புகிறார். மேலும் பெர்த், மெல்போர்ன் போன்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் சற்று அதிகப்படியான வேகம் இருக்கும்.

Advertisement

எனவே அந்த வேகத்தைப் பயன்படுத்தி நீங்கள் பைன் லெக், பிஹைன்ட் உட்பட அனைத்து திசைகளிலும் அதிரடியாக அடிக்கலாம். அந்த வகையில் அவர் பின்னங்காலில் நின்று அதிரடியாக அடிப்பதில் திறமையானவர். சமீபத்திய போட்டிகளில் அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களை பயன்படுத்தி அழகான கவர் ட்ரைவ்களை அடித்தார். 

எனவே அவர் அனைத்து இடங்களிலும் அடிக்கும் திறமை வாய்ந்த வீரர். மேலும் பேட்டிங்க்கு சாதகமாக அமையப்போகும் ஆஸ்திரேலிய மைதானங்கள் அவருக்கு நிச்சயமாக பொருந்தும். அத்துடன் பவுலர்கள் உங்களுக்கு எதிராக ஃபுல்லாக வீச முயற்சித்தால் சற்று விலகி பந்தின் வேகத்தை பயன்படுத்தி எளிதாக அடிக்கலாம்” என்று கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News