இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் நடந்து முடிந்த ஐசிசி ஆடாவர் டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா விரைவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்களில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், விராட் கோலியைப் பொறுத்தவரை, இன்னும் நான்கைந்து ஆண்டுகள் அவர் விளையாடுவார் என்றும் கருத்துகளை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர், விராட் கோலி தனது சிறந்த உடற்தகுதியுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்றும், அதே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா இன்னும் இரண்டு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என்றும் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், "ரோஹித் சர்மாவால் இன்னும் இரண்டு ஆண்டுகள் எளிதாக விளையாட முடியும். அதேபோல் நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் விராட் கோலி மேலும் ஐந்து வருடங்கள் வரை நிச்சயம் விளையாடுவார். ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் மிகவும் ஃபிட்டான வீரர் என்றால் அது விராட் கோலி தான். நீங்கள் 19 வயதுடைய எந்த வீரரையும் அவருடன் போட்டியிடச் சொல்லுங்கள் (உடற்தகுதியைப் பொறுத்தவரை), நிச்சம் விராட் கோலி அவர்களை தோற்கடித்துவிடுவார்.
அவர் அந்தளவு உடற்குதியுடன் இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சியிருப்பதாக நான் நம்புகிறேன், அது முழுக்க முழுக்க அவர்களைப் பொறுத்தது. அவர்கள் போதுமான உடற்தகுதியுடன் இருந்தால், அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் மற்றும் அணி வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த இரண்டு வீரர்களும் மக்கள் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாக விளையாட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் அல்லது டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் உங்களுக்கு அனுபவம் தேவை. வளர்ந்து வரும் திறமைகளை வளர்க்க அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் நிச்சயம் அணியில்க் தேவை. யாராவது சிறப்பாக செயல்படவில்லை என்றால், அவரை நீக்க வேண்டும் என்பதை தேர்வாளர்கள் பார்க்க வேண்டும்.
அவர்கள் மூத்த வீரர்களாக இருந்தாலும் சரி, ஜூனியர்களாக இருந்தாலும் சரி. ஆனால் அனைவரும் உடல்தகுதியுடன் இருக்கும் வரை அவர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும். அதேசமயம் அவர்களால் எந்தவகையிலும் அணிக்கு உதவ முடியவில்லை எனில், அதாவது ரன்களை சேர்க்க முடியாமல் தொடர்ந்து தடுமாறு பட்சத்தில், அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு செலல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.