அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு நேற்றைய தினம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்றனர். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காணொளியையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கினார்.
இந்நிலையில், இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்தும், நடப்பு டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்தும் பேசிய காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அக்காணொளியில் பேசியுள்ள ரோஹித் சர்மா, “2007 டி20 உலகக்கோப்பையை வென்றது ஒரு வித்தியாசமான உணர்வு. மேலும் அப்போது நாங்கள் இந்த வெற்றி பேரணியை மதியம் தொடங்கினோம், ஆனால் தற்போது இது மாலையில் நடைபெற்றுள்ளது.
ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை என்னால் மறக்க முடியாது, ஏனெனில் அது எனது முதல் உலகக் கோப்பை தொடராகும். ஆனால் தற்போது இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கொஞ்சம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக தெரிகிறது. ஏனெனில் இப்போது நான் அணியை வழிநடத்தி சென்றதுடன் கேப்டனாக கோப்பையை வென்றுள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்.
இந்த வெற்றியின் மூலம் நீங்கள் உங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தலாம், ஏனெனில் இது நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் எவ்வளவு மகிழ்ச்சியை வழங்கியுள்ளது என்பதை இது காட்டுகிறது, எனவே அவர்களுக்காகவும் ஏதாவது சாதித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமின்றி 2011 ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வென்ற இடத்திற்கு தற்போது டி20 உலகக் கோப்பையைக் கொண்டு வருவது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும்” என்று தெரிவித்துள்ளார்.