சூர்யகுமார் பாகிஸ்தானியராக இருந்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது - சல்மான் பட்!

Updated: Mon, Jan 09 2023 10:52 IST
“If Suryakumar Yadav Was In Pakistan, He Would Have Become Victim Of…”- Salman Butt (Image Source: Google)

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வெறும் ஓராண்டில் வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய வீரர் என்பதால் டிவில்லியர்ஸுக்கு பின் மிஸ்டர் 360 என அழைக்கப்படுபவர் சூர்யகுமார் யாதவ்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வெல்ல கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி கடைசி டி20 போட்டியில் களமிறங்கிய நிலையில், அதிரடியாக விளையாடிய 45 பந்தில் சதமடித்த சூர்யகுமார் யாதவ், 112 ரன்களை குவித்து இந்திய அணி 20 ஓவரில் 228 ரன்களை குவிக்க உதவினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே 2 சதங்களை விளாசியிருந்த சூர்யகுமார் யாதவ், 3வது சதத்தை இலங்கைக்கு எதிராக விளாசினார்.

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு (4 சதங்கள்) அடுத்து 2ஆவது இடத்தில் உள்ளார் சூர்யகுமார் யாதவ். விரைவில் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துவிடுவார்.

இந்நிலையில் 32 வயதான சூர்யகுமார் யாதவ், அவரது 30 வயதில் தான் இந்திய அணியில் முதல் முறையாக ஆட வாய்ப்பு பெற்றார். அதன்பின்னர் இந்த 2 ஆண்டில் மிகப்பெரிய வீரராக வளர்ந்திருக்கிறார். அபாரமாக பேட்டிங் ஆடி பல வியக்கத்தகு இன்னிங்ஸ்களை ஆடி அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அமைப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார் சல்மான் பட்.  இதுகுறித்து பேசிய சல்மான் பட், “சூர்யகுமார் யாதவ் 30 வயதுக்கு மேல் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவே தொடங்கினார் என படித்திருக்கிறேன். நல்வாய்ப்பாக சூர்யகுமார் யாதவ் இந்தியராக பிறந்துவிட்டார். 

ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை