இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

Advertisement

இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் நிதானம் காட்ட மறுமுனையில் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் எடுத்த நிலையில் பில் சால்ட் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 10 பவுண்டரிளுடன் 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லரும் 34 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதற்கிடையில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த ஜோ ரூட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரிகளுடன் 69 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் ஒருபக்கம் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ஆதில் ரஷித் 14 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த லியாம் லிவிங்ஸ்டோனும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், ஷமி, ஹர்திக், ரானா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 30 பந்துகளிலும், ஷுப்மன் கில் 45 பந்துகளிலும் என தங்கள் அரைசதங்களை பதிவுசெய்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 60 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தனார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 32ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 119 ரன்களை எடுத்த கையோடு ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 44 ரன்களைச் சேர்த்த நிலையிலும், அடுத்து வந்த கேஎல் ராகுல் 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அக்ஸர் படேல் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 44.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News