இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனக்கா பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஜோடி கில் மற்றும் ரோகித் இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சுப்மன் கில் 70 ரன்கள், ரோகித் சர்மா 83 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.

Advertisement

அடுத்து உள்ளே வந்த விராட் கோலி நிதானமாக விளையாடி 45வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவில் கிட்டத்தட்ட 1250 நாட்களுக்கு பிறகு அடிக்கும் சதம் இதுவாகும். இந்த இன்னிங்சில், 87 பந்துகளில் 113 ரன்களுக்கு அவுட்டானார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 373/7 ரன்களை அடித்தது.

Advertisement

மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க வீரர் பதும் நிஷங்கா 72 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 47 ரன்களும் அடித்து அவுட்டாகினர். 176/7 என இலங்கை அணி தடுமாறியபோது, உள்ளே வந்த கேப்டன் ஷனக்கா அபாரமாக ஆடி படுதோல்வியிலிருந்து மீட்டார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் 88 பந்துகளில் 108 ரன்கள் அடித்தார். இருப்பினும் 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்தது இலங்கை அணி. இதன் மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதில்45ஆவது சதம் அடித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பின் பேட்டியளித்த விராட் கோலி பேசுகையில், “செஞ்சுரி அடிக்காதபோதும் இதேபோல தான் பயிற்சி செய்தேன். என்னுடைய பயிற்சியில் எந்த வித்தியாசமும் இல்லை. நான் நன்றாக தான் பந்தை எதிர்கொள்கிறேன். 25-30 ரன்களில் அதை(சதத்தை) தவற விடுகிறேன்.

இன்றைய ஆட்டத்தில், மைதானத்தின் கண்டிஷனை இரண்டாம் பாதியில் புரிந்து கொண்டேன். அதற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்து விளையாடினேன். இந்த காலகட்டத்திற்குள் (1250 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் செஞ்சுரி அடிப்பது பற்றி) நான் புரிந்து கொண்டது ஒன்று மட்டும்தான். விரக்தியில் இருந்தால், அது உங்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது. அதை மட்டும் பண்ணவே கூடாது என்று முடிவெடுத்தேன்.

மேலும், எந்தவொரு விஷயத்தையும் குழப்பிக் கொள்ளாமல் மைதானத்திற்குள் சென்று இயல்பான ஆட்டத்தை தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும். மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் மைதானத்திற்குள் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் எதற்காக விளையாடுகிறோம் என்கிற காரணம் மட்டும் தெரிந்தால் போதும், அன்றைய போட்டியில் வெற்றிக்கு மற்றும் மைதானத்தின் கண்டிஷனுக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்தி விடலாம். 

Advertisement

ஒவ்வொரு போட்டியையும், நான் இதுதான் எனது கடைசி போட்டி என்கிறவாறு எதிர்கொண்டு வருகிறேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனது காலம் கடந்தும் கிரிக்கெட் ஆட்டம் சென்று கொண்டே இருக்கும். நான் எப்போதும் விளையாட போவதில்லை. ஆகையால் எனக்கு கிடைத்திருக்கும் இந்த இடம் மற்றும் நேரத்தை நான் மகிழ்ச்சியுடனும் மிகவும் என்ஜாய் செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News