ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவிற்கு இந்த மூன்று வீரர்கள் அவசியம் - பிரெட் லீ!

Updated: Thu, Oct 24 2024 12:09 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில்,இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்தியா வெல்ல வேண்டுமானால், அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் சிறந்த ஃபார்மில் மீண்டு வரும் முகமது ஷமி ஆகியோர் தேவை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த முறை இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் முகமது ஷமி உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். பும்ரா எவ்வளவு சிறந்த பந்து வீச்சாளர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர், அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசுவார் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் பழைய பந்தை பயன்படுத்துவதிலும் சிறந்தவர். இதுதவிர்த்து ரிவர்ஸ் ஸ்விங்கிலும் அவர் மிகச்சிறந்த ஒருவராக திகழ்கிறார். அதேபோல் முகமது சிராஜ் புதிய பந்தைப் பயன்படுத்துவது சிறந்த வீரராக விளங்குகிறார். மேலும் பெர்த், அடிலெய்டு போன்ற ஆடுகளங்களில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கலை உருவாக்க முடியும்.

Also Read: Funding To Save Test Cricket

ஏனெனில் அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை இது தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கலவையாக இருக்கும். அந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இந்தியா இத்தொடரை எதிர்கொள்ளும் என்று நம்புகிறேன். இதுதவிர்த்து அவர்களிடம் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் சில பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். ஆனால் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் அந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் நிச்சயம் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை