ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10ஆவது வருடமாக ஐசிசி தொடரில் தோற்று வெறும் கையுடன் நாடு திரும்பியது. குறிப்பாக ஜாம்பவான்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்ததால் அவர்களை கழற்றி விட்டு புதிய வீரர்களை சேர்க்குமாறு ரசிகர்கள் கொந்தளித்தனர். 

Advertisement

இந்நிலையில் அந்த தோல்விக்கு பின் நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளில் விளையாட உள்ளது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.

Advertisement

இந்நிலையில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கும் அந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் வரை வேறு எந்த டெஸ்ட் தொடர்களும் இல்லாததால் தற்போதைக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று வெளியான செய்திகள் உண்மையாகியுள்ளது. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் ஷுப்மன் கில், விராட் கோலி, போராடி கம்பேக் கொடுத்து ஃபைனலில் அசத்திய அஜிங்கிய ரகானே துணை கேப்டனாகவும் தேர்வாகியுள்ளனர்.

அதேசமயம் தொடர்ந்து சொதப்பிய புஜாராவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு 2023 ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெயிஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் சரவெடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். அதே சமயம் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இல்லாத நிலைமையில் கேஎஸ் பரத் மற்றும் இசான் கிசான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சுத் துறையில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் 12 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், முகமது சிராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஷார்துல் தாகூர் மீண்டும் தேர்வாகியுள்ள நிலையில் நட்சத்திர சீனியர் வீரர் முகமது ஷமி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் சர்ஃப்ராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

Advertisement

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்கிய ரஹானே, கேஎஸ் பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துள் தாகூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனட்கட், நவ்தீப் சைனி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News