அமீரகத்தில் நடைபெற்றுவரும் 14ஆவது சிசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தேவ்தத் படிக்கல் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஸ்ரீகர் பரத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பரத் 32 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி அரைசதம் அடித்தார்.
கோலியுடன் இணைந்து விளையாடிய மேக்ஸ்வெல்லும் பவுண்டரி, சிக்சர் என விளாசி அசத்தினார். பின் 51 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த மேக்ஸ்வெல்லும் அரைசதம் கடந்தார்.
இறுதியில் மெக்ஸ்வெல்லுடன் இணைந்த ஏபிடி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கேரை உயர்த்தினார். பின் பும்ராவின் 19ஆவது ஓவரில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் ஆணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.