டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு இர்ஃபான் பதான் பதிலடி!

Updated: Tue, Dec 05 2023 14:29 IST
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு இர்ஃபான் பதான் பதிலடி! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது. அதை தொடர்ந்து அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று உலகக்கோப்பை தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், வரும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்கி வெற்றியும் கண்டனர். அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தனர். அதனால் அவர்களை கழற்றி விட்டு 2024இல் பாண்டியா தலைமையில் புதிய இளம் அணியை களமிறக்கும் வேலைகளை பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு செய்து வருகிறது.

இந்தநிலையில், 2007க்குப்பின் இந்தியா தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் இளம் வீரர்களை விட தாம் சிறந்தவர் என்பதை விராட் கோலியும் பாண்டியாவை விட தாம் சிறந்த கேப்டன் என்பதை ரோஹித் சர்மாவும் நிரூபித்தால் மட்டுமே 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், 2007 டி20 உலகக் கோப்பையில் சேவாக், கம்பீர், ஹர்பஜன், அகர்கர் போன்ற சீனியர் வீரர்கள் இருந்ததை மறந்து விடாதீர்கள் என்று அவருக்கு  பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இளம் வீரர்களால் மட்டும் சாதித்து விட முடியாது என்று தெரிவிக்கும் அவர் அனுபவ வீரர்களின் அவசியத்தை பற்றி அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், “இந்திய அணி அனுபவம் மற்றும் இளமையை கலந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். 2007இல் அனுபவமற்ற இளம் அணி கோப்பையை வென்றதாக அனைவரும் பேசுகிறார்கள். ஆனால் அத்தொடரில் கம்பீர், சேவாக் ஆகியோர் நீண்ட நாட்களாக விளையாடியவர்களாக இருந்தனர்.

நானும் தோனியும் சுமார் 4 வருடங்கள் விளையாடியிருந்தோம். அஜித் அகர்கர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் அனுபவமிக்கவர்களாக இருந்தனர். எனவே வெளிநாட்டு மண்ணில் சவாலான சூழ்நிலைகளில் பேட்டிங் துறையில் அசத்துவதற்கு உங்களுக்கு அனுபவமிக்க வீரர்கள் அவசியம்” என்று கூறியுள்ளார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை