நடத்தை விதிகளை மீறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 248 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதனால் அந்த அணி 270 ரன்கள் பின் தங்கியதால, ஃபலோ ஆன் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெகநரைன் சந்தர்பால், அலிக் அதானஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த ஜான் கேம்ப்பெல் மற்றும் சாய் ஹோப் இருவரும் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடி வருகின்றனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
இதன் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் உள்ள ஜான் காம்பெல் 87 ரன்களுடனும், ஷாய் ஹோப் 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தல ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 97 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நோக்கி ஜெய்டன் சீல்ஸ் பந்தை வீசியதன் காரணமாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெய்டன் சீல்ஸுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதமும், ஒரு கரும்புள்ளியையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது.
மேலும் ஜெய்டன் சீல்ஸும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அபராதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் அவர் மீது மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்பட தவறிவரும் நிலையில், தற்சமயம் அந்த அணி வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.