பேட்ஸ்மேன்களின் வேலையை ரோஹித் எளிதாக்கியுள்ளார் - ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்!

Updated: Sat, Nov 11 2023 20:12 IST
பேட்ஸ்மேன்களின் வேலையை ரோஹித் எளிதாக்கியுள்ளார் - ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்! (Image Source: Google)

இந்திய அணி தற்பொழுது நடப்பு உலகக் கோப்பையில் எட்டு லீக் போட்டிகளையும் வென்று அடுத்து கடைசி மற்றும் ஒன்பதாவது லீக் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

அதே நேரத்தில் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி வெற்றி பெறுவது குறித்து ரசிகர்கள் மிகவும் இந்த முறை நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இதுவரையிலான இந்திய அணியின் செயல்பாடு திறமையின் அடிப்படையிலும் மனரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் அற்புதமாக இருந்து வந்திருக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணியை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் மிகச் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார்கள். இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பங்கு மிகப் பெரியது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே வேகமாக ரன்களை குவித்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையையும் இந்தியாவின் வெற்றியையும் எளிதாக்குவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. அவர் களத்திலும் களத்திற்கு வெளியேயும் கேப்டனாக அணியையும் முன்னின்று வழி நடத்துகிறார். குறிப்பாக ஆரம்பத்திலேயே பட்டாசு போல விளையாடி அவர் எங்களுக்கு அதிரடியான துவக்கத்தை கொடுக்கிறார். முக்கிய போட்டியில் அவர் கொடுக்கும் துவக்கம் தான் எங்களுக்கு வெற்றிக்கான பாதையை திறக்கிறது. 

இறுதியில் அதைப் பார்ப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கலாம். ஆனால் பயிற்சியாளர்களாக அவர் ஏற்படுத்தும் தாக்கத்தின் கடினத்தன்மையை நாங்கள் அறிவோம். குறிப்பாக அவர் பேட்டிங் துறையில் அடுத்து வரும் வீரர்களின் வேலையை எளிதாக மாற்றுகிறார். எனவே எஞ்சிய போட்டிகளிலும் அவர் இதே போல இந்தியாவை தலைமை தாங்குவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பொதுவாக நாங்கள் அதிரடியாக விளையாடுவதை பற்றி பேசுவோம். அது போன்ற அணுகு முறையில் உங்களுடைய கேப்டன் அதிரடியாக விளையாடி எடுத்துக்காட்டாக இல்லாமல் போனால் மற்றவர்களால் அதை பின்பற்ற முடியாது. அவருடைய கேப்டன்ஷிப் செயல்பாடுகளும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதனால் அவர் எங்களுடைய அணியில் அதிகமான மதிப்பை பெற்றுள்ளார். இந்த வெற்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும் தகுதியான அவர் இதை தொடர்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை