டி வில்லியர்ஸின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

Updated: Mon, Oct 23 2023 12:45 IST
டி வில்லியர்ஸின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா! (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி நேற்று தரம்சாலாவில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 273 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் குவித்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசிய சர்மா, 40 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக இந்த 2023 ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் (53) அடித்த 3ஆவது வீரர் என்ற சாதனையையும், முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, கிறிஸ் கெயில் 56 சிக்ஸர்கள் (2019), ஏபி டிவிலியர்ஸ் 58 சிக்ஸர்கள் (2015) அடித்து முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.

இதே போன்று உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 37 சிக்ஸர்கள் அடித்திருந்த டிவிலியர்ஸ் சாதனையை 40 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். இந்த பிரெண்டன் மெக்கல்லம் 29 சிக்ஸர்கள், ரிக்கி பாண்டிங் 31 சிக்ஸர்கள், கிறிஸ் கெயில் 49 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

மேலும், இந்தப் போட்டியில் 46 ரன்கள் எடுத்ததன் மூலமாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 354 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். மேலும், இந்த தரம்சாலா மைதானத்தில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் எடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக 14 ரன்கள் எடுத்ததே ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி 48 ஓவர்களில் 274 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. விளையாடிய 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. வரும் 29ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 29ஆவது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடக்க இருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை