SL vs NZ, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!

Updated: Sat, Sep 28 2024 20:07 IST
Image Source: Google

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியானது தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 22 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறியது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை கேன் வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன் எதுவுமின்றியும் தொடர்ந்தனர். இதில் வில்லியம்சன் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் 8 ரன்களில் ஆஜாஸ் படேலும், 13 ரன்களில் டேரில் மிட்செலும், டாம் பிளெண்டல், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், மிட்செல் சான்ட்னர் 29 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளையும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்து அணியானது 515 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ம்பினார். 

அதன்பின் இணைந்த டெவான் கான்வே - கேன் வில்லியம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் டெவான் கான்வே தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்கள் எடுத்த நிலையில் டெவான் கான்வே விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிபார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, டாம் டேரில் மிட்செல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி 121 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டாம் பிளெண்டல் மற்றும் கிளென் பிலீப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டாம் பிளெண்டல் 47 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் அறிமுக வீரர் நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 315 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை