WC Qualifier: ஃபாத்திமா சனா, சித்ரா அமீன் அசத்தல்; தொடர் வெற்றிகளை குவிக்கும் பாகிஸ்தான்!

Updated: Thu, Apr 17 2025 22:36 IST
Image Source: Google

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷவாலி ஸுல்ஃபிகுர் - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷவாலி 7 ரன்களுக்கும், முனிபா அலி 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய அலியா ரியாஸ் 7 ரன்களுக்கும், சித்ரா நவாஸ் 11 ரன்களுக்கும் நடையைக் கட்டினார். பின்னர் சித்ரா அமீனுடன் இணைந்த கேப்டன் ஃபாத்திமா சனாவும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களுடைய அரைசதங்களை பூர்த்தி செய்து அசத்தினர். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த சித்ரா அமீன் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாத்திமா சனா 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே சேர்த்தது. தாய்லாந்து தரப்பில் திபாட்சா புத்தவோங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தாய்லாந்து மகளிர் அணியானது எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாகவே நன்னபட் கொஞ்சரோயென்கை 19 ரன்களையும், நாட்டாய பூச்சத்தம் 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் தாய்லாந்து மகளிர் அணியானது 34.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 118 ரன்களில் ஆல் அவுட்டானது. 

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் மகளிர் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரமீன் ஷமிம், கேப்டன் ஃபாத்திமா சனா, நஷரா சந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், தொடர்ச்சியாக தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அசத்திய ஃபாத்திமா சனா ஆட்டநாயகி விருதினை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை