SL vs IND: இலங்கை தொடரில் இருந்து ரோஹித், கோலி & பும்ராவிற்கு ஓய்வு!
இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றன.
இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவியேற்பார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர்கள் மூவரும் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடினர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.