சூர்யகுமாரிடம் அணி நிர்வாகம் எதையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!

Updated: Mon, Mar 20 2023 13:06 IST
Rohit Sharma Makes BIG Statment on Suryakumar Yadav After IND vs AUS 2nd ODI! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. 

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 26 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 117 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக மிட்சல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 11 ஓவர்களிலேயே 121 ரன்கள் குவித்து போட்டியை வெற்றிகரமாக முடித்தது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியை போன்றே இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு தொடர்ந்து இரண்டாவது முறையாக கோல்டன் டக் அவுட்டாகி இருக்கும் அவர் மீது உள்ள எதிர்பார்ப்புகள் அடங்கி தற்போது அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் சூரியகுமார் யாதவால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதுவரை 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 25 ரன்கள் சராசரியுடன் 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளதால் இனியும் அவர் ஒருநாள் போட்டிக்கு தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் சூரியகுமார் யாதவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, “ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு எப்போது திரும்புவார் என்று தெரியாது. அதுவரை சூர்யகுமார் யாதவ் தான் அந்த இடத்தில் விளையாட முடியும்.

தற்போது அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் முந்தைய போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார். எனவே அவரது திறமைக்கு ஏற்றவாறு இன்னும் கூடுதலான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அப்படி கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும் போது அவரிடம் இருந்து ரன்கள் வரும். சூரியகுமார் யாதவுக்கு 7-8 போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் அவரிடம் இருந்து நாம் ரன்களை எதிர்பார்க்கலாம்.

இப்போதும் சூர்யகுமார் யாதவ் நல்ல பார்மில் தான் இருக்கிறார். ஆனால் தற்போது மாற்று வீரராக மட்டுமே அவர் விளையாடி வருவதால் அணி நிர்வாகம் எதையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படும் போது சூரியகுமார் யாதவே தனது நிலையை புரிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை