இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியும், ராஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணியும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை . அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அர்பித் கௌத் 3 ரன்னிலும், ஹர்ஷ் கௌலி 2 ரன்னிலும், ஹர்ப்ரீத் சிங் 15 ரன்னிலும், ஷுப்ரன்ஷு சேனாபதி 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ராஜத் பட்டிதார் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ராஜத் பட்டிதார் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட நிலையில், மறுமுனையில் வெங்கடேஷ் ஐயர் 17 ரன்னிலும், ராகுல் பதம் 19 ரன்னிலும், திரிபுரேஷ் சிங், ஷிவம் சுக்லா ஆகியோர் சொற்ப ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜத் பட்டிதார் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் மத்திய பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைக் குவித்தது. மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டயஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா மற்றும் அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரித்வி ஷா 10 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 16 ரன்னில் நடையைக் கட்டினார்.
அதன்பின் ரஹானேவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரஹானே 37 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதில் அதர்வா அன்கோலேகர் இரண்டு சிக்ஸர்களுடன் 16 ரன்களையும், சூர்யன்ஷ் ஷெட்ஜ் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.