இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறின. இதில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதன்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு வழக்கம் போல் ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உமா சேத்ரி 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

மேற்கொண்டு அவருக்கு துணையாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனாவும் 10 பவுண்டரிகளுடன் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடியதுடன் 14 பந்துகளில் 4 பவ்வுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரிதளவில் சோபிக்க தவறினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணியானது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்துள்ளது. இலங்கை மகளிர் அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளையும், பிரபோதானி, சச்சினி நிசன்சாலா, கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரத்னே - கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சமாரி அத்தபத்து - ஹர்ஷிதா சமரவிக்ரமா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் சமாரி அத்தபத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கவிஷா தில்ஹாரியும் அபாரமாக விளையாட இலங்கை அணியின் வெற்றியும் உறுதியானது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 69 ரன்களையும், கவிஷா தில்ஹாரி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தெடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைபடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News