விராட் கோலிக்கு ஒரு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும் - மிஸ்பா உல் ஹக் பாராட்டு!

Updated: Wed, May 15 2024 22:57 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அந்தவகையில் பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ச்ஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளன. 

மேலும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியானது ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் அழுத்தத்தை உணர்கிறார்கள்.

இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடும் போதெல்லாம், ஆரம்பம் நன்றாக இருந்தால், நான் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்துள்ளேன்.நீங்கள் சிறப்பாக விளையாடும் போது நிச்சயம் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். விராட் கோலி பல அணிகளுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். அதிலும், குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அவரது ஆட்டம் அபாரமாக இருந்துள்ளது.

அதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிமான போட்டிகளில் அவர் மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடி நிறைய சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் எப்போது விராட் கோலிக்கு எதிராக விளையாடுவதில் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள். அதேப்போல் விராட் கோலியும் பாகிஸ்தானுக்கு எதிராக தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற மனநிலையுடன் களமிறங்குவார்.

விராட் கோலி பெரிய போட்டிகளில் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் அதை உத்வேகமாக எடுத்துக் கொள்ளக்கூடிய வீரர். அவர் எந்த அணிக்கு எதிராகவும் அசத்தக்கூடியவர். பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளும் 2025 சாம்பியன்ஸ் கோப்பையில் அவரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்குவதே வெற்றிக்கான ஒரே வழியாகும். ஸ்ட்ரைக் ரேட் பற்றி நீங்கள் எவ்வளவு பேசினாலும் விராட் கோலிக்கு தனது அணியை எப்படி வெற்றி பெற வைக்க முடியும் என்பது தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை