குடும்பத்துடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட விராட் கோலி!
சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பின் 3 ஆண்டுகளாக சதமே அடிக்காமல் திணறிவந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்து, மீண்டும் தனது சத கணக்கை தொடங்கினார்.
அதன்பின்னர் சதங்களாக விளாசி தனது சாதனை பயணத்தை மீண்டும் தொடங்கிவிட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கும் விராட் கோலி, டெஸ்ட்டில் 27 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தமாக 74 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டுகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரில் கோலி விளையாடவில்லை. ஓய்வில் இருக்கும் விராட் கோலி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்காக தயாராகிவருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற, இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடர். இந்த முக்கியமான தொடரில் இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால், விராட் கோலி சிறப்பாக ஆடியாக வேண்டும்.
இந்நிலையில், விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகல் வாமிகாவுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் பக்தர்களுடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.