ஒரு விளையாட்டு வீரராக அனைவரும் ஒருநாள் முடிவெடுக்க வேண்டி வரும் - ஓய்வு குறித்து விராட் கோலி!

Updated: Thu, May 16 2024 14:59 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அந்தவகையில் பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளன. 

மேலும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியானது ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக அவருடன் இணைந்து விராட் கோலியும் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விராட் கோலி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 

இதுகுறித்து பேசிய அவர், “ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் ஒருநாள் முடிவு என்ற ஒன்று இருக்கும் என்று நினைக்கிறேன். என்னால் இறுதிவரை விளையாடிக்கொண்டே இருக்க முடியாது. எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என நினைக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்வில் இதனைச் செய்திருக்கலாம் என்று பின்னாட்களில் வருத்தப்படக்கூடாது. நான் செய்ய நினைப்பவற்றையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும்.

அதனால்தான் என்னுடைய முழு பலத்தையும் நான் விளையாட்டில் காட்டி முனைப்போடு விளையாடி வருகிறேன். அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது. ஒருவேளை நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார், அதன்பின் என்னை உங்களால் சில காலம் காண முடியாது. அதனால் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துமுடிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை