இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா!

Updated: Mon, Sep 18 2023 12:01 IST
இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா! (Image Source: Google)

இந்திய அணி நேற்று ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்று, ஆசியக் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இறுதிப் போட்டியில் மழையின் ஆபத்து மிக அதிகமாகவே இருந்தது. அது ரிசர்வ் டே ஆன இன்றும் தொடர்கிறது. இப்படியான நிலைமையில் முகமது சிராஜ் தனது அற்புதமான பந்துவீச்சால் இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டினார்.

இதன் காரணமாக இந்திய அணி வெகு எளிதாக 6.1 ஓவர்களில் இலக்கை எட்டி, எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. நேற்றைய போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் நேற்றைய போட்டியில் முகமது சிராஜ் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். அவர் தனது இரண்டாவது ஓவரை வீசும் பொழுது நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி விட்டார். 

மேலும் நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்னும் ஒரு ஓவர் கூடுதலாக வீசினார். அதற்குப் பிறகு அவருக்கு ஓவர் நிறுத்தப்பட்டது. தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "நாங்கள் அனைவரும் அவரை பாராட்டுகிறோம். அந்த ஸ்பெல்லை அவர் வீசும் பொழுது நாங்கள் அனைவரும் பின்னால் இருந்தோம். அவர் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். நான் அவரை தொடர்ந்து வீச வேண்டும் என்று விரும்பினேன்.

ஆனால் அப்பொழுது எங்கள் பயிற்சியாளர் இடமிருந்து, அவர் அதற்கு மேல் பந்து வீசக்கூடாது நிறுத்த வேண்டும் என்று செய்தி வந்தது. அதனால் நிறுத்த வேண்டியதாக இருந்தது. எந்த ஒரு பேட்டர் மற்றும் பவுலர் அவர்களுக்கான நாளில் தொடர்ந்து செல்ல விரும்புவார்கள். ஆனால் இந்த இடத்தில் தான் என்னுடைய வேலை வருகிறது. 

நான் அனைவரையும் கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் அவர் இதே போன்ற சூழ்நிலையில் இருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஒரே டிராட்டில் எட்டு ஒன்பது ஓவர்கள் வீசினார். அப்பொழுது அவர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இப்பொழுது அவருக்கு ஏழு ஓவர்கள் போதுமானது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை