இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இந்திய அணியை எளிதில் சுருட்டி விடலாம் என இங்கிலாந்து வீரர்கள் எண்ணினர். ஆனால், அவர்களுக்கு ரிஷப் மற்றும் ஜடேஜா சிம்ம சொப்பனமாக இருந்தனர். 

Advertisement

ரிஷப் தன்னுடைய அதிரடியாலும், ஜடேஜா தன்னுடைய பொறுப்பான நிதான ஆட்டத்தாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சோதித்தனர். ரிஷப் 89 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜடேஜா நேற்று 83 ரன்களில் இருந்த நிலையில், இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சதத்தை பதிவு செய்தார். பின்னர் அடுத்தடுத்து ஜடேஜாவும், ஷமியும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று தப்பு கணக்கு போட்ட இங்கிலாந்து அணிக்கு மரண பயத்தை காட்டினார் இந்திய அணி கேப்டன் பும்ரா. 

ஒரே ஓவர் தான் இந்திய அணியின் ஸ்கோர் எங்கையோ சென்றுவிட்டது. என்ன வேகத்தில் இருந்தாரோ பிராட் ஓவரை பிரித்து மேய்ந்துவிட்டார் பும்ரா. ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரிகளை விளாசி தள்ளினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்ததோடு மொத்தம் இந்த ஓவரில் மட்டும் அவர் 29 ரன்கள் குவித்தார்.

ஆனால், இதனை விட பரிதாபம் என்னவென்றால் பிராட் எஸ்ட்ரா மூலமாக மேலும் 6 ரன்களை வாரி வழங்கினார். ஒரு ஓயிடில் 5 ரன்களும், நோ பால் மூலம் ஒரு ரன்னும் இந்திய அணிக்கு கிடைத்தது. ஆக மொத்தம் தான் வீசிய 84ஆவது ஓவரில் மட்டும் 35 ரன்கள் கொடுத்து மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் பிராட். 

இதற்கு முன்பு 2003ஆம் ஆண்டு  பீட்டர்சன் கொடுத்த 28 ரன்கள் தான் மோசமான சாதனையாக இருந்து வந்தது. ஏற்கனவே, டி20 கிரிக்கெட்டில் பிராட் ஓவரில் ஆறு பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி இருந்தர் யுவராஜ் சிங். அதுவும் ஒரு மோசமான சாதனை.

 

இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 16 பந்துகளில் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்சை விளாடி வருகிறது. இங்கிலாந்து அணி 16 ரன்னில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அலெக்ஸ் லீ விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. 

உண்மையில் இன்றைய போட்டியில் தன்னுடைய 550ஆவது விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டி இருந்தார் ஸ்டூவர்ட் பிராட். ஆனால், ஒரே ஓவரில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அந்த மைல்கல் இன்று சோதனைக்குள்ளாகிவிட்டது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News