பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அனியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்திருந்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியில் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களையும், ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 16 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க வங்கதேச அணி 53 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த ஷாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன, இருவரும் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 50 ரன்களில் மொமினுல் ஹக் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிய ஷாத்மன் இஸ்லாம் 93 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தற்போதுவரை வங்கதேச அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பிடித்த அபாரமான கேட்ச் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி நசீம் ஷா பந்துவீச்சில் வங்கதேச அணி வீரர் ஜாகீர் ஹசன் அடித்து ஆட முயற்சிக்க அது பேட்டில் எட்ஜ் எடுத்து சென்றது. அதனை சரியாக கணித்த முகமது ரிஸ்வான் அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் ரிஸ்வான் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.